கருணாநிதி வீட்டு பந்தல் திடீர் அகற்றம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகம் ஆகியவற்றின் முன்புஅமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை பந்தல் இன்று திடீரென்று அகற்றப்பட்டது.
கும்பகோணம் தீவிபத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீடு, திமுக இளைஞர் அணிதலைமையகமான அன்பகம் ஆகியவற்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள குடிசைப் பந்தலையும் அகற்ற சென்னை மாநகராட்சிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரிடம், அதிமுக கவுன்சிலர் வெற்றிவேல் மனுகொடுத்திருந்தார்.
இந் நிலையில் இரு இடங்களிலும் உள்ள குடிசைகள் இன்று அவசரம் அவசரமாக அகற்றப்பட்டன. கருணாநிதியின் வீட்டுவளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தல், வீட்டு முன்பு போடப்பட்டிருந்த பந்தல் ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டன.
அதேபோல அன்பகம் வளாகத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையும் இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டது.தற்போது அங்கு வெறும் மூங்கில் கம்புகளே நின்று கொண்டுள்ளன. அவற்றையும் சில ஊழியர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுகவினரே இந்த பந்தல்களை அகற்றி விட்டதாகத் தெரிகிறது.