கும்பகோணம்: தமிழக சட்டமன்றம் இரங்கல்
சென்னை:
தமிழக சட்டசபை இன்று காலை கூடி, கும்பகோணம் பள்ளித் தீ விபத்தி இறந்த குழந்தைகளுக்குஇரங்கல் தெரிவித்தது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் விவாதம் ஏதும் நடத்தப்படாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டது. கூட்டத்தைஎத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என்பது பற்றி முடிவு செய்ய சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது.
இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் சபைகூட்டத் தொடரை குறைந்து ஒரு மாதத்திற்காவது நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், 10 நாட்கள் மட்டுமே சபை நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதில் 24 மற்றும் 25 ஆகிய நாட்கள்விடுமுறை நாட்களாகும். எனவே 8 நாட்களுக்கு மட்டுமே கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இதன்படி இன்று காலை அவை கூடியது. உடனே, கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு இரங்கல்தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து வாசித்தார். அதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இன்று அவை ஒத்தி வைக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் வெளியே வந்த திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் பேசுகையில்,இரங்கல் தீர்மானத்தில் குழந்தைகளின் மரணத்திற்கு அஞ்சலி தெரிவிப்பதை விடவும், ஜெயலலிதாவின் புகழ்பாடுவதில்தான் சபாநாயகர் காளிமுத்து அதிக அக்கறை எடுத்துக் கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இரங்கல் தீர்மானத்தில் கூட ஜெயலலிதாவின் புகழ் பாடுவதில்தான் அதிககவனம் செலுத்தினார் சபாநாயகர் என்றார்.
எதிர்க் கட்சித் தலைவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகையில்,
இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலோ, அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் சொல்லும்வகையிலோ தீர்மானம் இல்லை. குழந்தைகள் விஷயம், இது துயரமான சம்பவம் என்பதால் சர்ச்சையை ஏற்படுத்தவிரும்பவில்லை என்றார்.
நாளை எதிர்க் கட்சிகள் உண்ணாவிரதம்:
சட்டமன்றத்தை மிகக் குறுகிய நாட்களே நடத்தி எதிர்க் கட்சிகளை பேச விடாமல் அரசு தடுப்பதாகக்கூறி, நாளை கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க திமுக, பா.ம.க., காங்கிரஸ் ஆகியவை முடிவுசெய்துள்ளன.
இதற்கு போலீஸ் அனுமதி தராவிட்டாலும் உண்ணாவிரதம் நடக்கும் என அக் கட்சிகள்அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications