கும்பகோணம்: செருப்பு துடைத்து நிதி வசூல்!
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நூற்பாலை தொழிலாளர் ஒருவர் கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்காகவும், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோருக்குஉதவுவதற்காகவும் பொது மக்களின் செருப்புகளை துடைத்து நிதி வசூல் செய்கிறார்.
விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சார்லஸ், தனியார் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கும்பகோணம் தீ விபத்தில் இறந்தகுடும்பங்களுக்கு உதவ நினைத்த அவர், தன்னால் இயன்ற பண உதவியோடு, கூடவே நிதி வசூல் செய்யவும் திட்டமிட்டார்.
தினமும் பொது மக்களின் செருப்புகள், ஷூக்களைத் துடைத்து பணம் வசூலிக்கிறார். இதேபோல, பஸ்களில்பயணிப்போரிடமும், வாகனங்களில் செல்வோரை நிறுத்தியும் செருப்புக்களைத் துடைத்து நிதி வசூல் செய்கிறார்.
சார்லஸின் தன்னலமற்ற செயலால் கவரப்படும் பலரும் ஆர்வத்துடன் அவரிடம் பணம் கொடுக்கின்றனர். பெரும்பாலானவர்கள்அவரை தங்களது செருப்பைத் தொட விடாமல் தடுத்துவிட்டு பணம் தருகின்றனர். ஆனாலும், அதை வாங்க மறுக்கும் சார்லஸ்இந்த சின்ன வேலையை செய்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என்கிறார்.
வசூல் செய்யும் பணத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்து அவர் மூலம்கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக சார்லஸ் கூறுகிறார்.