கருணாநிதியின் பேச்சு குற்றமாகும்: பொன்னையன்
சென்னை:
சட்டசபை நிகழ்வுகள் அடங்கிய புத்தகங்களை எரிப்பேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சொல்வது சட்டப்படி குற்றமாகும்என்று நிதியமைச்சரும், சபை முன்னவருமான பொன்னையன் கூறினார்.
சட்டசபையில் விவாதம் நடத்தப்படாமலேயே மசோத்தக்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர்கருணாநிதிக்கும் அமைச்சர் பொன்னையனுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
பொன்னையன் பொய்யான தகவல்களைக் கூறுகிறார் என்று குற்றம் சாட்டிய திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு ஆதாரமாககடந்த 1979-80ம் ஆண்டில் நடந்த சட்டசபை நிகழ்வுகள் குறித்த புத்தகங்களைக் காட்டினார்.
இதில் உள்ளவற்றை பொன்னையன் ஏற்காமல், தொடர்ந்து பொய்களைக் கூறி வந்தால் இந்தப் புத்தகங்களை தீவைத்துக்கொளுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என கருணாநிதி ஆவேசமாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் பொன்னையன் பேசுகையில், கருணாநிதியின் பேச்சு சட்டப்படி குற்றமாகும். சபை நிகழ்வுகள்குறித்த புத்தகங்களை கருணாநிதி எரித்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சபைக்கு வந்துநேரில் விளக்கம் அளிக்க முன் வர வேண்டும். வெளியில் இருந்தபடி விமர்சிக்கக் கூடாது.
இந்தப் பிரச்சனை அவையின் உரிமைக் குழுவின் ஆய்வில் இருப்பதால், இது குறித்து பத்திரிக்கைகள் உள்பட எவரும்(கருணாநிதி உள்பட) வெளியில் விவாதிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது அல்லது வெளியிடக் கூடாது என்று உத்தரவிடுகிறேன்என்றார்.-