மதுரை நீதிமன்றத்துக்கு மனித குண்டு மிரட்டல்
பெரியகுளம் & சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை மனித வெடிகுண்டால் தகர்க்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடம் மாற்றம் செய்யக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், மதுரை கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது, ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கக் கூடாது, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வற்புறுத்தி இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியுள்ளனர்.
இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், சுபாஷன் ரெட்டி ஆஜராகும் வழக்குகளின் விசாரணையை புறக்கணிப்போம் என வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருவதால் வழக்கு விசாரணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொது மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்:
இந் நிலையில் பெரியகுளத்தில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதி தேவகிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், இன்றும் நாளையும் விரைவு நீதிமன்றத்தை தற்கொலைப் படையினர் குண்டு வைத்து தகர்ப்பார்கள். அதே போல நெல்லை நீதிமன்றமும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் மனித வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications