300 முத்திரைத் தாள் முகவர்களின் அங்கீகாரம் ரத்து
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மொத்தம் 300 முத்திரைத் தாள் முகவர்களின் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
போலி முத்திரைத் தாள்கள் விற்பனையில் தமிழகம் முக்கிய இடத்தில் இருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆர்.டி.ஓ.அலுவலகங்களுக்கு இணையாக ஊழலில் கொடி கட்டிப் பறக்கும் அலுவலகங்கள் தான் தமிழக ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்கள் (பதிவாளர்,சார் பதிவாளர் என்ற செந்தமிழில் போர்டு போட்டுக் கொண்டு இயங்கும் அலுவலகங்கள்).
வெளியில் நிற்கும் புரோக்கர்களைத் தாண்டி நாமாக அலுவலகத்துக்குள் எந்த வேலையையும் முடித்துவிட முடியாது. புரோக்கர்கள்மூலமாகப் போனால் மட்டுமே உள்ளே உள்ள ஊழியர் உங்களை கண்டுகொள்வார்.
இந்த அலுவலகங்களைப் பொறுத்தவரை எதற்கெடுத்தாலும் பணமே. தமிழக அரசின் வருவாய்த்துறையின் கீழ் வரும் இந்தஅலுவலகங்களை ஊழலின் தலைமை அலுவலகங்கள் என்று கூட சொல்லாம்.
முத்திரைத் தாள்கள் மூலமே இங்கு அனைத்து பரிவர்த்தனைகளும் நடக்கும். தமிழகத்தில் போலி முத்திரைத் தாள் விவகாரம் வெடித்தஉடனே எல்லோர் பார்வையும் விழுந்தது இந்த அலுவலகங்கள் மீதுதான்.
இந்த அலுவலகங்களுக்கு முத்திரைத் தாள்களை சப்ளை செய்யும் முகவர்கள் பலரும் கோடிக்கணக்கான மதிப்பிலான போலி முத்திரைத்தாள்களை சப்ளை செய்துள்ளதாக புகார்கள் உள்ளன.
இதைத் தொடர்ந்து முறைகேடாக, போலி முத்திரைத் தாள்களை விற்பனை செய்த சுமார் 300 முகவர்களின் உரிமங்களை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 56 முகவர்கள், சேலத்தில் 51 முகவர்கள், திருவண்ணாமலையில் 40 முகவர்களின் உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
வேலூர், அரக்கோணம், செய்யாறு, திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள மொத்தம் 350 முகவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுஅவர்களில் 191 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 100 பேருடைய உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் விசாரணை நடந்து வருகிறது.