அழகர் கோவிலில் பக்தர்கள், அதிகாரிகள் மோதல்
மதுரை:
மதுரை அழகர் கோவில் ஆடித் தேரோட்ட விழாவில் பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே தகராறுமூண்டது.
அழகர் கோவிலில் ஆடித் தேரோட்ட விழா இன்று காலை நடந்தது. தேரோட்டத்திற்குப் பின் பக்தர்கள் 18ம் படிகருப்பண்ண சுவாமிக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இதற்காக பக்தர்கள் சந்தனக் குடங்களுடன் 18ம் படி கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு வந்தபோது, இந்துஅறநிலையத்துறை அதிகாரிகள் குறுக்கிட்டு, ஒவ்வொரு குடத்திற்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றுகட்டாயப்படுத்தினர்.
இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறினர். இதையடுத்து கோவிலின் கதவைஅறநிலையத்துறை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
அதிகாரிகளின் இந்தச் செயலால் கடும் ஆத்திரமடைந்த பக்தர்கள் சந்தனக் குடங்களை கோவில் முன் வைத்துவிட்டு மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 3 மணி நேர இழுபறிக்குப் பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலை திறக்கவைத்தனர். அதன் பின்னர் மறியல் போராட்டத்தைக் கைவிட்ட பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.