இராக்: இந்தியர்கள் விடுதலையாக வாய்ப்பு
குவைத்:
தீவிரவாதிகளின் நிபந்தனைப்படி இராக்கில் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள குவைத் நிறுவனமான கல்ப்லிங்க் போக்குவரத்து நிறுவனம் முன் வந்துள்ளது. இதையடுத்து 3 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பிணைக் கைதிகளும்விரைவில் விடுவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் லாரிகளை இராக்கில் ஓட்டிச் சென்ற திலக்ராஜ், அந்தர்யாமி, சுக்தேவ் ஆகிய மூன்றுஇந்தியர்களையும் 3 கென்யர்களையும் ஒரு எகிப்திய டிரைவரையும் கடந்த ஜூலை 21ம் தேதி தீவிரவாதிகள்பிடித்துச் சென்றனர்.
அமெரிக்கப் படைகளுக்கு உணவு சப்ளையில் இந்த லாரிகள் ஈடுபட்டிருந்தன.
இதையடுத்து தீவிரவாதிகள் நியமித்த தூதரான துலாய்மி மூலமாக குவைத் நிறுவனம் சமரச பேச்சு நடத்தியது.இந்தியத் தூதரகமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பலூஜா நகரில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினருக்கு நஷ்டஈடுவழங்க வேண்டும், இராக்கில் தனது லாரிப் போக்குவரத்தை குவைத் நிறுவனம் நிறுத்த வேண்டும் போன்றநிபந்தனைகளை தீவிரவாதிகள் விதித்தனர். மேலும் தங்களுக்கும் பணம் கோரினர்.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணம் தர முன் வந்த குவைத் நிறுவனம், தீவிரவாதிகளின் மற்ற இருகோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டது. இதனால் பேச்சுவார்த்தையும் நின்றுபோக, பிணைக் கைதிகளின் நிலைஅபாய கட்டத்தை எட்டியது.
இந் நிலையில் இராக்கில் இருந்து அனைத்து லாரிகளையும் குவைத் நிறுவனம் திரும்பப் பெற்றால் 7 பிணைக்கைதிகளையும் விடுதலை செய்வதாக தீவிரவாதிகள் நேற்று மீண்டும் அறிவித்தனர்.
இதையடுத்து அனைத்து லாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும், இராக்கில் இந் நிறுவன லாரிகள் இனிஇயங்காது என்றும் குவைத் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.