4 நாட்கள்தான் இருக்கு.. ஆக்சன் ரெடி! லண்டனில் இருந்து திரும்பும் ஸ்டாலின்.. கையிலெடுக்கும் அஸ்திரம்
சென்னை: ஜூலை 18ம் தேதி லண்டனில் இருந்து தமிழ்நாடு திரும்பும் ஸ்டாலின் திமுக கட்சிக்குள் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தில் மட்டுமன்றி, ஆளுங்கட்சியான திமுகவிற்குள்ளும் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது.
திமுகவின் தோல்வி குறித்து ஆராய திமுக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் களத்தில் இறங்கியது. இதற்காக அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட 'உண்மை கண்டறியும் குழு', தங்களது விரிவான மற்றும் கள ஆய்வு அறிக்கையை கட்சியின் தலைமைக்கு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்றே கூறலாம்.
லண்டனில் இன்பநிதிக்கு பட்டம் - குடும்பத்துடன் சென்ற ஸ்டாலின்
ஒருபுறம் அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்க, மறுபுறம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான தனது இளங்கலை பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி நேரில் கலந்துகொண்டு பட்டம் பெறுகிறார். இதற்காக கடந்த 4-ம் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின். இந்த லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் ஜூலை 18-ம் தேதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சி
ஸ்டாலின் தற்போது லண்டனில் இருந்தாலும், சென்னை அறிவாலய வட்டாரங்களில் 'உண்மை கண்டறியும் குழு' கொடுத்த அறிக்கைதான் தற்போதைய ஹாட் டாபிக். 36 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் ரகசியமாகவும், நேரடியாகவும் சென்று தொண்டர்களிடமும், கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி இந்த அறிக்கையைத் தயார் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல தகவல்கள் திமுக தலைமையையே உலுக்கியுள்ளதாக அறிவாலய மூத்த நிர்வாகிகள் முணுமுணுக்கிறார்கள். பல மாவட்டங்களில், பல ஆண்டுகளாகக் கட்சியில் உச்சகட்ட பதவிகளையும், அரசு சலுகைகளையும் அனுபவித்த மாவட்டச் செயலாளர்களும், முக்கிய தலைவர்களும் கட்சிக்கு உண்மையாக உழைக்காமல் 'முதுகில் குத்திய' விவகாரங்கள் தகுந்த ஆதாரங்களுடன், ஆடியோ மற்றும் வீடியோ சாட்சியங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
விஐபி தொகுதிகளில் நடந்த 'உள்ளடி' வேலைகள்
குறிப்பாக, திமுக மிக எளிதாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட பல விஐபி தொகுதிகளில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் எதிர்க்கட்சியினருடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. திமுக வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காகவே, உள்ளூர் நிர்வாகிகள் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக, தேர்தல் பணிகளுக்காகத் தலைமை அனுப்பிய தாராளமான தேர்தல் நிதியை, முறையாகக் கீழ்மட்டத் தொண்டர்களுக்கும், பூத் கமிட்டி பணிகளுக்கும் கொண்டு சேர்க்காமல், முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது சொந்தப் பைகளுக்குள் சுருட்டிய அதிர்ச்சிப் புகாரும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சொந்தக் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கத் தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது, கூட்டணி கட்சிகளுடன் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டது என அடுக்கடுக்கான புகார்கள் அந்த அறிக்கையில் பக்க வாரியாக விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த தலைமை, துரோகம் செய்தவர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் திமுகவில் பெரும் களை எடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிரடித் திட்டம் தீட்டியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறிப்பது, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்குவது எனப் பட்டியல் தயாராகிவிட்டதாம்.
4 நாட்களுக்கு பின் ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அதிரடி ஆக்சன் நடவடிக்கைகள் தொடங்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications