லட்டு மாதிரி பாயிண்ட் எடுத்து தந்த செந்தில் பாலாஜி.. முன்ஜாமீனை ரத்து செய்து கைது செய்ய விஜய் பிளான்
சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு உள்ள ஜாமீனை ரத்து செய்வதற்காக கோர்ட்டில் தமிழக அரசு காய் நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை கைது செய்வதில் விஜய் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்குப் பணம் கொடுத்து குதிரைப்பேரம் பேச முயன்ற வழக்கில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கின் பின்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் என். இளையராஜாவைத் தொடர்புகொண்ட ஒரு கும்பல், தவெக அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது கட்சி மாறி வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாகப் பேரம் பேசியது. அத்துடன், இதற்கு உடன்படாவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை, அதற்கெல்லாம் ஆதாரமும் இல்லை.
இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் தவெக எம்.எல்.ஏ இளையராஜா புகாரளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய சென்னை-திருவல்லிக்கேணி போலீசார், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 9 பேரைக் கைது செய்தனர். இந்த விசாரணையில், கைதான நபர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டது முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் என்று புகார் வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி முன் ஜாமீன்
இதற்கிடையே, தங்களைக் காவல் துறையினர் கைது செய்யக்கூடும் என்பதால் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி முன்னிலையில் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையும் நேரில் ஆஜராகி செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு மேலாகியும், இருவரும் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகிப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னை-திருவல்லிக்கேணி போலீசார் இவர்களுக்குச் சம்மன் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையிலும், இவர்கள் விசாரணைக்கு வராமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
முன்ஜாமீனை ரத்து செய்ய விஜய் அரசு பிளான்
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை செந்தில் பாலாஜி தரப்பு மீறியுள்ளதால், தவெக அரசு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முன்ஜாமீன் விதிகளை மீறிய குற்றத்திற்காக நீதிமன்ற அனுமதியோடு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க முதல்வர் விஜய் தரப்பு முழு வீச்சில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications