2 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
சென்னை:
அமைச்சரவையில் புதிதாக 2 பேரை சேர்த்துள்ள முதல்வர் ஜெயலலிதா, 5 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிஅமைத்துள்ளார். இதில் பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செ.ம.வேலுச்சாமி ஆகியோர் வசம் இருந்தமுக்கியமான இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமனும், விஜயலட்சுமி பழனிச்சாமியும் இன்றிரவு8.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவில் பதவியேற்கின்றனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், விஜயலட்சுமி பழனிச்சாமிசமூகநலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்கள்:
நிதியமைச்சர் பொன்னையன் வசம் இருந்த உணவு, சிவில் சப்ளைஸ் ஆகியவை பறிக்கப்பட்டு ஜெயராமனிடம்வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செ.ம.வேலுச்சாமியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டுள்ளது. அதுவும்ஜெயராமனிடம் வழங்கப்படுகிறது. இனி வேலுச்சாமி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மட்டும்நீடிப்பார். இதன்மூலம் வேலுச்சாமி டம்மியான துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வசம் இருந்த மின்சாரத்துறை பறிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைபோக்குவரத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு விஜயலட்சுமிபழனிச்சாமியிடம் தரப்படுகிறது.
வேளாண்மைத்துறை அமைச்சர் பாண்டுரங்கன் வசம் இருந்த ஊரகத் தொழில்துறை பறிக்கப்பட்டு அதுவளர்மதியிடம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் டம்மி அமைச்சராகியுள்ளார் வளர்மதி.
இதில் வளர்மதியோடு, மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது செ.ம. வேலுச்சாமி தான். அவர் வசம் இருந்து பணம் கொழிக்கும் வணிகவரித்துறையும் கூட்டுறவுத்துறையும் பறிக்கப்பட்டுள்ளது.
வணிகவரித்துறையை கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் வழங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா, கூட்டுறவுத்துறையை ஜெயராமனிடம்தந்துள்ளார்.