காஞ்சிபுரம் கோவிலில் மேலாளர் படுகொலை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் கோவில் மேலாளர் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் மேலாளராகப் பணியாற்றி வந்தவர் சங்கரராமன். நேற்று மாலை அவரது வீட்டுக்கு சிலர் வந்து, சங்கர ராமன் எங்கே என்று கேட்டுள்ளனர்.
சங்கரராமன் கோவில் அலுவலகத்தில் இருப்பதாக மனைவி பத்மா கூறியுள்ளார்.
பின்னர் அந்தக் கும்பல் நேராக கோவிலுக்கு சென்றது. அங்கு அலுவலகத்தில் இருந்த சங்கர ராமனை கத்தியாலும்,அரிவாள்களாலும் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பியோடிவிட்டது.
கழுத்தில் மிக ஆழமாக வெட்டப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சங்கர ராமன் பரிதாபமாக இறந்தார். டி.எஸ்.பி.பரணீஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் சமீபத்தில் நகை திருடுபோனது. இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் சிலரிடம் சங்கர ராமன்கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் படுகொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.