2 மனைவி விவகாரம்: டி.ஆர்.பாலுவுக்கு எதிராக வழக்கு
சென்னை:
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோற்ற வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.ஆர்.பாலு.இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் திருவான்மியூரைச் சேர்ந்த புருஷோத்தமன்.
இந் நிலையில் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது டி.ஆர்.பாலு கொடுத்த உறுதிமொழிப் பத்திரத்தில், தனக்கு 2 மனைவிகள் இருப்பதாகதெரிவித்துள்ளார்.
ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்வது இந்து திருமணச் சட்டப்படி குற்றமாகும். ஆனால் தனக்கு 2மனைவிகள் இருப்பதாக பாலுவே ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 17ன்படி பாலு குற்றம் இழைத்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 494, 495 ஆகிய பிரிவுகளின் கீழ்அவர் தண்டனைக்குரியவராகிறார்.
சட்டத்தை மீறுகிற யாரையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியும். அந்த வகையில் சட்டத்தை மீறுகிற வகையில்நடந்து கொண்டுள்ள டி.ஆர்.பாலுவின் தேர்வை ரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சொக்கலிங்கம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.