இலங்கையே தேவலாம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை
திருச்சி:
இலங்கை கடற்படை வீரர்களால் கடத்திச் செல்லப்பட்ட 3 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுதிருச்சி வந்து சேர்ந்தனர். இலங்கையில் கூட கொடுமையை அனுபவிக்காத அவர்கள் திருச்சியிலிருந்துராமேஸ்வரம் சேர்வதற்குள் பெரும் பாடு பட்டு விட்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜான்சன், முருகேசன், டேவிட் ஆகிய மீனவர்கள்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.
சுமார் 10 மாதமாக அவர்கள் இலங்கை சிறையில் அடைபட்டிருந்தனர். இந் நிலையில் வவுனியா நீதிமன்றம்அவர்களை 2 மாதத்திற்கு முன்பு விடுதலை செய்தது. இதையடுத்து 3 மீனவர்களையும் இலங்கை அரசுசிறையிலிருந்து விடுவித்து விமானம் மூலம் திருச்சி அனுப்பி வைத்தது.
ஒரு பைசா கூட பணம் இல்லாமல் வெறும் கையுடன் திருச்சி வந்த அவர்களை வரவேற்க யாரும் இல்லை. விமானநிலையத்திலிருந்து வெளியேறிய 3 பேரும் அங்கிருந்து நடந்தே திருச்சி பஸ் நிலையம் வந்தடைந்தனர்.
எப்படி ஊருக்கு செல்வது, டிக்கெட் எடுக்க காசு இல்லையே என்று வேதனை அடைந்த அவர்கள், வேறு வழியின்றிபஸ் நிலையத்தில் இருந்தோரிடம் தங்களைப் பற்றிக் கூறி காசு கேட்டுள்ளனர். சிலர் இரக்கப்பட்டு காசுகொடுத்துள்ளனர். சிலரோ, இவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று கூறி ஏசியுள்ளனர்.
இவர்களைப் பார்த்து பரிதாபமடைந்த சில போலீஸார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். பின்னர் ஊரில் உள்ள உறவினர்களுடன் பேசுவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர்போலீஸார் கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு 3 பேரும் ராமேஸ்வரம் சென்றனர்.
ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்த அவர்கள் 3 பேரும், தங்களது உறவினர்களைக் கண்டதும் கண்ணீருடன் கட்டித்தழுவினர். இலங்கை கடற்படை கூட தங்களை கொடுமைப்படுத்தவில்லை. ஆனால் நமது சொந்த மண்ணில்இறங்கியது முதல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு விட்டோம் என்று அவர்கள் கூறியது வேதனையைத் தந்தது.