கடன் தொல்லை: ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை
திருச்சி:
கடன் தொல்லை அதிகரித்ததாலும், வறுமையாலும் விரக்தி அடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொண்டது திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வரகநேரி ஒரக்கட்டான் மலை சாலை பகுதியில் வசித்து வந்தவர்கள் சலீமா பீவி (வயது 75), அவரதுமகன்கள் சலாவுதீன் (60), முகம்மது ரபீக் (51), மகள்கள் சபைதா (40), நஸீரா (30).
சலீமாவின் குடும்பத்தினர் பெரும் வசதியுடன் வாழ்ந்து வந்தவர்கள். இந் நிலையில் சலீமாவின் கணவர்இறந்ததையடுத்து அவரது சொத்துக்களை அடமானம் வைத்தும், விற்றும் தனது பிள்ளைகளைக் காப்பாற்றினார்சலீமா.
காலப்போக்கில் சொத்துக்களை மீட்க முடியாமல் போகவே வறுமை குடிகொண்டது. தந்தையின் சொத்துக்கள்பறிபோனதாலும், குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டதாலும் சோகமடைந்த சலாவுதீனும், ரபீக்கும் திருமணம்செய்து கொள்ளாமல் தாயையும், சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து வேலைக்கு செல்லஆரம்பித்தனர்.
லாரிகளை வாங்கி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். இருப்பினும் குடும்ப வறுமை குறையவில்லை. இந்நிலையில் இடி மேல் இடியாக கடன் கொடுத்து வாங்கியிருந்த லாரிக்கான கடன் தொகையை திரும்பசெலுத்தாதால், கடன் கொடுத்தவர்கள் லாரிகளை எடுத்துச் சென்று விட்டனர்.
இதனால் சலீமா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையைக் கேட்டுபல்வேறு தொல்லைகளையும் கொடுத்து வந்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சலீமாவின் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தனர். இரவு தூங்கப் போகும்போதுஅனைவரும் விஷம் குடித்துள்ளனர். இதில் சலாவுதீன் உடனடியாக இறந்து விட்டார். மற்ற அனைவரும் உயிருக்குஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் நான்கு பேரும் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். ஒரே குடும்பத்தில் 5 பேர்தற்கொலை செய்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.