நான் நேர்மையாக செயல்பட்டேன்: ராம்மோகன்
சென்னை:
எனது நேர்மையான செயல்பாடுகளை தாங்க முடியாத சில அரசியல் கட்சிகள் தான் எனது செயல்பாடுகளை விமர்சனம் செய்தன என்றுபதவி விலகிச் செல்லும் ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.
தனது ராஜினாமா குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:
இரண்டு வாரங்களுக்கு முன் என்னை வட-கிழக்கு மாநிலங்களில் ஒன்றுக்கு கவர்னராக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு என்னிடம்தெரிவித்தது. குடும்ப சூழ்நிலையைக் காரணாக நான் வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல முடியாது என்பதையும், வேறு ஒரு மாநிலத்துக்குமாற்றினால் மகிழ்ச்சியோடு செல்வேன் என்றும் கூறினேன்.
ஆனால், என்னை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இதனால் ராஜினாமா செய்துவிட்டேன்.
தமிழக கவர்னராக நான் பதவி வகித்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். எனது இளமைக் காலத்தை ஒருங்கிணைந்த சென்னைமாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த விஜயவாடாவின் கவர்னர்பேட்டில் கழித்தேன்.
நான் பதவி வகித்த காலத்தில் சட்டப்படி செயல்பட்டேன். எனக்கு சந்தேகங்கள் வந்தபோது சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைக்கேட்டுப் பெற்று செயலாற்றினேன்.
கவர்னர் என்ற முறையில் யாருக்கும் சலுகை காட்டவோ, யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவே செயல்பட்டதில்லை. பல்கலைக்கழகவேந்தர் என்ற முறையில் தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்த நான் முயன்றேன்.
எனது நேர்மையான செயல்பாடுகளை தாங்க முடியாத சில அரசியல் கட்சிகள் எனது செயல்பாடுகளை விமர்சனம் செய்தன. தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாகவும், அதையொட்டி நான் முடிவுகள் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சிகள் விமர்சனம் செய்தன.
மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பான விஷயத்தில் நான் தலையிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 36 ஆண்டுகள் போலீஸ்பணியில் இருந்தவன் நான். எனக்கு சட்டம்-ஒழுங்கு நிலைமையை சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு போதுமான அறிவு உண்டு.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சில அரசியல் கட்சிகள் தான் கூறினவே தவிர, பத்திரிக்கைகள் கூட அப்படிச்சொல்லவில்லை.
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்துக்கு நான் ஒப்புதல் தந்தது, டெஸ்மா சட்டத்துக்கு ஒப்புதல் தந்தது எல்லாமே சட்ட நிபுணர்களை கலந்துஆலோசித்த பின்னர் தான். அரசியல்சட்டத்துக்கு உட்பட்டே அச் சட்டங்கள் இருந்தன. இதனால் தான் ஒப்புதல் தந்தேன்.
அதே போல உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகள் தொடர்பான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. தேர்தல் கமிஷனிடம்தான் உள்ளது என்று கூறியுள்ளார் ராம் மோகன் ராவ்.
லலித் கலா அகாடெமி நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராவிடம் ராஜினாமா குறித்துக் கேட்டபோது, நான் இப்போது சந்தோஷமாக வீட்டுக்குப்போகிறேன் என்றார்.