ஜெ. பதவி விலக வேண்டும் என்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழக ஆளுநர் மாற்றல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேநடந்த உரையாடலை வெளியிட்ட ஜெயலலிதாவும், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷும் உடனடியாக தங்களது பதவிகளைராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அன்றாடும் நடக்கும் கொலை, கொள்ளை, பொய்யாக போடப்பட்ட பொடா வழக்குகள், என்கெளண்டர் சாவுகள்போன்றவை ஆளுநர் ராம் மோகன் ராவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடாகத் தெரியவில்லையா என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்த அபிடவிட் மனுவில், தமிழக ஆளுநரை மாற்ற நான்(கருணாநிதி) நிர்பந்தம் செய்ததாகவும், அப்படிச் செய்வதை உறுதி செய்யும் வகையில்தான் சென்னைக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசு அதிகாரியின் எல்லை மீறிய செயல் இது. தன்னை அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளும் போக்கைக் கையாண்டுள்ளார் லட்சுமிபிரானேஷ். இது சட்டவிரோதமானது, ஆட்சேபகரமானது.
உச்ச நீதிமன்றத்தில் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும்இடையே நடந்த தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டுள்ளார்.
முதல்வரும், உள்துறை அமைச்சரும் பேசியது தலைமைச் செயலாளருக்குத் தெரிந்தது என்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பதவிப்பிரமாணத்தின்போது முதல்வர் எடுத்துக் கொண்ட ரகசியக் காப்பு பிரமாணத்தின் கதி இதுவென்றால், இங்கே சட்டத்தை மதிக்கும் தன்மைஎந்த அளவுக்குக் கெட்டுப் போய்க் கிடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இதற்குப் பரிகாரமாக முதல்வரும், தலைமைச் செயலாளரும் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நான் நிர்பந்திப்பதாய் லட்சுமி பிரனேஷ் கூறியிருக்கிறார். நான் கைது செய்யப்பட்டபோது கூடஜெயலலிதா ஆட்சியைக் கலைக்கக் கூடாது எனறு தான் மத்திய அரசிடம் சொன்னேன் என்று கூறியுள்ளார்.
ராம் மோகனுக்கு கேள்வி:
கருணாநிதி வெளியிட்ட இன்னொரு அறிக்கையில்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க் கட்சிகள் மட்டுமே கூறி வந்தன, பத்திரிக்கைகள் அதுகுறித்து எந்த செய்தியும்வெளியிடவில்லை என்று ராம் மோகன் ராவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளைகள், எதிர்க் கட்சிகள் மீது தொடரப்படும் அவதூறு வழக்குகள், பொய்யான பொடாவழக்குகளில் வைகோ, பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் போன்றவர்கள் கைது செய்யப்பட்டது, காவல்துறை அதிகாரிகள் போலிமுத்திரைத் தாள் மோசடியில் ஈடுபட்டது,
காவல்துறையின் மிக மூத்த அதிகாரிகள் மீதே ஒரு பெண் பாலியல் புகார்கள் கூறியிருப்பது, என்கெளண்டர் என்ற பெயரில் நடந்தகொலைகள் இவையெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவாக ராவுக்குத் தெரியவில்லையா?
அரசு ஊழியர்கள் மீது நடந்த அக்கிரமங்கள், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்படாமல் போனதை ஆளுநர் மறைக்கப்பார்க்கிறாரா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
த.செயலாளர் மீது வைகோ தாக்கு:
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிட்டத்தட்ட அரசியல்வாதியாகவே மாறி திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இது கடுமையான கண்டனத்துக்குரியது.
மேலும் ஒரு முதல்வருக்கும் மத்திய அமைச்சருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை வெளியிட்டிருக்கிறார் லட்சுமி பிரனேஷ்.இதன்மூலம் ரகசிய காப்பு பிரமாணம் மீறப்பட்டுள்ளது. தனது பதவியையை கேவலப்படுத்திவிட்ட லட்சுமி பிரனேஷ் உடனே ராஜினாமாசெய்ய வேண்டும்.
அவர் விலகாவிட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications