பாத யாத்திரையை கைவிட்ட விஜய்குமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்தியதையடுத்து பண்ணாரியில் இருந்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரை பாதயாத்திரை நடத்த முடிவு செய்திருந்த அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமார் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.
ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது மதரீதியிலான அடையாளங்களுக்கு வலிமையூட்டும் செயல்களில் ஈடுபட மரபுகள் தடை செய்கின்றன.இதனை உள்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது.
மேலும் இந்த பாத யாத்திரையை வைத்து அதிமுகவுக்கு அரசியல் லாபம் கிடைக்கச் செய்ய விஜய்குமர் முயல்வதாக பா.ம.கவும், ஐபிஎஸ்விதிமுறைகளுக்கு மாறாக பாத யாத்திரை நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கண்டனம்தெரிவித்திருந்தன.
இதனால், புதிய சர்ச்சையில் சிக்க விரும்பாத விஜய்குமார் அத் திட்டத்தை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதற்குப் பதிலாக சபரிமலைக்குச் சென்று வர அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தாடியுடன் காட்சியளிக்கும்விஜய்குமார், மலைக்குச் செல்ல மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளார்.
அதிரடிப்படைக்கு பாராட்டு விழா:
வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படைக்கு இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்பிரமாண்டமான பாராட்டு விழா நடக்கிறது.
இந் நிகழ்ச்சியில் அதிரடிப் படையினராடு வனத்துறையினர், முன்னாள் அதிரடிப்படையினரும் கெளரவிக்கபடுகின்றனர்.
முத்துச்சாமி பாலத்திலிருந்து அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகள் காவல்துறை வாகனங்களில் ஊர்வலமாக நேரு விளையாட்டுஅரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வீரப்பன் வேட்டையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் அவர்கள் கொண்டுவந்தனர்.
திரைப்பட நடன ஆசிரியர் கலா தலைமையிலான நடனக் குழுவினர் இன்னிசை நடன விருந்தை அளிக்கிறார்கள். அத்தோடு இரவில்இன்சுவை விருந்தும் நடக்கிறது.
அதிரடிப்படையினருக்கு ரூ. 3 லட்சம் ரொக்கம், பதவி உயர்வுக்கான ஆணை, வீட்டு மனை ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவுகளைஜெயலலிதா வழங்குகிறார்.
முன்னாள் அதிரடிப்படைத் தலைவர்களான தேவாரம், நட்ராஜ் ஆகியோரும் கெளரவிக்கப்படுகின்றனர்.