எப்.ஐ.ஆரில் ஜெயேந்திரர் பெயர் இல்லை: வழக்கறிஞர்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) காஞ்சிசங்கராச்சாரியாரின் பெயர் இல்லை என்று அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல் தகவல் அறிக்கையை போலீஸார் எங்களிடம் கொடுத்தனர். 3 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் எந்த ஒருஇடத்திலும் ஜெயேந்திரர் பெயர் இல்லை. குறிப்பிட்டு சொல்லும்படி யார் பெயரும் அதில் இல்லை.
வரதராஜ பெருமாள் கோயில் ஊழியர் கணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அவர், கொலை நடந்த தினத்தன்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அலுவலகத்திற்கு வந்து,சங்கரராமனை தலையில் அரிவாளால் தாக்கினர். இதை அவர் தடுக்க முற்பட்டபோது, அவரது கையிலும் அரிவாள் வெட்டுவிழுந்தது.
நானும் உதவி கோரி சத்தம் போட்டேன். அதற்குள் கொலையாளிகள் வெளியேறிவிட்டனர். வெளியில் தயாராக இருந்த ஒருயமஹா மற்றும் ஹீரோ ஹோண்டா பைக்கில் அவர்கள் தப்பிவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எந்த அடிப்படையில்போலீஸார் ஜெயேந்திரரைக் கைது செய்தனர் என்பது தெரியவில்லை.
அவருக்கு இந்த வழக்கில் துளிகூட சம்பந்தம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்த வழக்கை நீதிமன்றம் மூலம்எதிர்கொள்வோம் என்று தியாகராஜன் கூறினார்.