மதுரை பள்ளிகளில் குண்டு புரளி
மதுரை:
மதுரையில் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் தொலைபேசி வந்ததையடுத்து பல பள்ளிகள்மூடப்பட்டன.
மேலப்பொன்னகரம் ஹோலி பேமிலி பெண்கள் பள்ளிக்கு முதலில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து திருநகர்,டவுன்ஹால் ரோடு, கீழவெளிவீதி, காமராஜர் சாலைகளில் உள்ள பள்ளிகளுக்கும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கும் இந்ப் புரளி பரவியது.
இதையடுத்து இந்தப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிகளை நோக்கி பதற்றத்துடன் படையெடுத்ததால், பரபரப்பு மேலும் அதிகமானது.
கூட்டமாக பெற்றோரும், மாணவ, மாணவிகளும், வேடிக்கை பார்ப்பவர்களும் பள்ளிகளின் வெளியே குவிந்துவிட அப்பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து இந்தப் பள்ளிகளில் சோதனையிட்டனர். மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தப்பட்டது. ஆனால்,இது வெறும் புரளியே என்பது உறுதியானது.
இந்தப் புரளியால் மதுரையின் பல பள்ளிகளும் நேற்று பாதியிலேயே மூடப்பட்டுவிட்டன.