ரோஜா வீட்டில் குண்டு புரளி
பூந்தமல்லி:
நடிகை ரோஜா வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது. சோதனைக்குப் பின் அது வெறும் புரளி எனத்தெரிந்தது.
சென்னை விருகம்பாக்கம் அப்பு சாலையில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் வீடு உள்ளது. இவரது தம்பிக்கு இன்று அண்ணாநகரில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் உறவினர்கள் அவரது வீட்டில் குழுமியிருந்தனர்.
செல்வமணியின் மனைவி ரோஜாவிற்குச் சொந்தமான வீடு வளசரவாக்கம் ஜானகி நகர், சரஸ்வதி தெருவில் உள்ளது. இந்த 2வீடுகளுக்கும் தொலைபேசியில் ஒரு மிரட்டல் வந்தது.
தொலைபேசியில் பேசிய மர்ம மனிதன் தான் யார் என்பதைத் தெரிவிக்காமல், 2 வீடுகளிலும் வெடிகுண்டு வைத்துஇருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறினான்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வளசரவாக்கம் போலீஸார் இரண்டுவீடுகளையும் சோதனை செய்தனர். சோதனையில் குண்டு எதுவும் இல்லை; அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.