ஜெயேந்திரருக்காக போராடியவர் திருட்டு வழக்கில் கைது!
கும்பகோணம் & வேலூர்:
ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சிவசேனா தலைவரை கோவில் கொள்ளைவழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மாவட்ட சிவசேனா சார்பில் ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி மாவட்டத் தலைவர்குட்டி சீனு எனப்படும் சிதம்பரம் தலைமையில் சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்திக் காண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார், அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் சிவன் கோவில் கொள்ளை வழக்கில் கைதுசெய்வதாகக் கூறி குட்டி சீனுவை அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜெயேந்திரர் விடுதலைக்காக போராடிய சிவசேனாவினர், குட்டி சீனுவை விடுவிக்கக்கோரி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
சிறையில் ஜெயேந்திரர் விரதம்:
இந் நிலையில் வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாத ஆச்சாரியார் இன்று சந்தித்துப் பேசினார்.
விஸ்வநாத ஆச்சாரியார், காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் மற்றும் காஞ்சி மட நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசினர்.
இன்று பிரதோஷம் தினம் என்பதால் ஜெயேந்திரர் சிறையில் விரதம் அனுஷ்டிக்கிறார் என்று கூறப்படுகிறது.