ஜெ. மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்: கருணாநிதி
சென்னை:
சங்கராச்சாரியார் மீது இரண்டாவதாக ஒரு வழக்கும் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால், ஜெயேந்திரர் கைது விஷயத்தில்திமுகவுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் மேலும் வலுவடைந்துவிட்டன என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஜெயேந்திரருடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் காரணமாகவே, அவரைப் பழி வாங்க, கொலை வழக்கில் ஜெயலலிதா கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார் என்று கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு கடும்எச்சரிக்கையும் விடுத்தார். சட்டப்படி கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியிருந்தார்.
இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது அதை நான் பாராட்டினேன். ஆனால், அரசு நடந்துகொண்ட முறையைப் பார்த்தால், அவரது கைதில் உள்நோக்கம் இருப்பதாக திமுகவுக்கு சந்தேகங்கள் எழுந்தன.
மேலும் கைதுக்கான காரணங்கள் குறித்து வந்த தகவல்களைக் கேட்டபோது இதில் வேறு ஏதோ பின்னணி இருப்பதாக சந்தேகம்ஏற்பட்டது. இதைத்தான் எனது கருத்தாக தெரிவித்தேன்.
இப்போது அவர் மீது இன்னொரு வழக்கும் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால் எங்கள் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.எங்களது சந்தேகம் சரியென்றே தோன்றுகிறது.
என் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். என் வாழ்வில் இதுமாதிரியான மிரட்டல்கள்எல்லாம் நிறைய பார்த்தவன் நான். அதைப் பற்றியெல்லாம் எனக்கு துளியும் கவலையில்லை.
ஜெயேந்திரர் கைது விஷயத்தில் நான் பல்டி அடித்துவிட்டதாக ஜெலலிதா சொல்கிறார். எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.கைதை பாராட்டியவன் தான் நான். ஆனால், அதற்கான காரணம் வேறு என்கிற சந்தேகம் கிளப்படுவதை சுட்டிக் காட்டினேன்.அவ்வளவு தான். இதில் பல்டி எங்கே வந்தது.
உண்மையான அந்தர் பல்டி என்றால் அதற்கு ஜெயலலிதாவைத் தான் நல்ல உதாரணமாகச் சொல்லலாம். மக்களவைத் தேர்தல்தோல்விக்குப் பின் மதமாற்றத் தடைச் சட்டத்தில் ஆரம்பித்து பலியிடுவதை வரை அனைத்தையும் வரிசைகட்டி வாபஸ்வாங்கினாரே. அதற்குப் பெயர் தான் சாட்சாத் அந்தர் பல்டி என்றார் கருணாநிதி.
அப்போது, சங்கராச்சாரியார் கைதில் அப்படி என்ன தான் வேறு பின்னணி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது, ஒருபத்திரிக்கையில் வெளிவந்த போட்டோவைக் காட்டிய கருணாநிதி, இதில் ஜெயலலிதா சங்கராச்சாரியாருக்கு மிக அருகே,அவருக்கு இணையாக சேரில் உட்கார்ந்திருக்கிறார். அதே நேரத்தில், அப்போது மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேகீழே தரையில் உட்கார்ந்திருக்கிறார்.
இரு முதல்வர்களில் ஜெயலலிதாவுக்கு ஜெயேந்திரர் தந்த இந்த முக்கியத்துவம் ஒன்றே போதும், அவர்கள் எவ்வளவு நெருக்கமாகஇருந்தார்கள் என்பதற்கு. ஜெயேந்திரருக்குப் பக்கத்தில் யாரையும் உட்காரவிட்டுவிட மாட்டார்கள் அந்த மடத்துக்காரர்கள்என்றார்.
சங்கராச்சாரியார் மீதான வழக்கே பொய்யானது என்று பாஜக சொல்கிறதே என்று கேட்டபோது, நான் அப்படிச் சொல்லமாட்டேன். கொலையில் அவருக்குத் தொடர்பிருந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தாக்குதல் வழக்கில் இப்போது சங்கராச்சாரியார் மீது இரண்டாவது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதே, இது பழிவாங்கும் நடவடிக்கையில்லையா என்று ஒரு நிருபர் கேட்டபோது, என் பதிலையே போடாமல்இந்தக் கேள்வியை மட்டும் பிரசுரியுங்கள். அதிலேயே முழு விஷயமும் இருக்கிறது என்றார் கருணாநிதி.
ஒருவருக்கு எதிராக எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் போடலாம், அது தவறில்லை. ஆனால், அதை நிரூபிக்கவேண்டும். அது இவர்களுக்குத் தெரிந்தால் சரி என்றார்.
வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து நான் தவறான கருத்து சொன்னதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் அப்படி எதையும்தெரிவிக்கவில்லை. கொல்லப்பட்டு பிடிக்கப்பட்டானா அல்லது பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டானா என்று மட்டும்தான்கேட்டேன் என்றார் கருணாநிதி தனது வழக்கமான கிண்டலுடன்.












Click it and Unblock the Notifications