திருச்சியில் ஸ்டீவ் வாஹ்!
திருச்சி:
இந்திய அணிக்கு பயிற்சியாளராக தான் நியமிக்கப்பட்டால், அணியில் இளைஞர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துவேன் என்றுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறினார்.
கிரிக்கெட்டைத் தாண்டி இந்தியாவின் மீதும், இந்தியர்கள் மீது பற்று உடையவர் வாஹ். இந்தியாவிற்கு விளையாடவரும்போதெல்லாம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அவர் அணியிலிருந்து ஓய்வு பெற்றபோது இந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் கெளரவத் தூதராக வாஹ் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் திருச்சி வந்த வாஹ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த சில ஆட்டங்களில் சச்சின் சரியாக விளையாடவில்லை என்பது உண்மைதான். முன்னணி ஆட்டக்காரர்கள் எப்போதும்முழுத் திறனுடன் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
சச்சினுக்கு எனது அறிவுரை எதுவும் தேவையிருப்பதாக நான் கருதவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டால், இளைஞர்களை அணியில் சேர்ப்பதில் கவனம் செலுத்துவேன். 21வயதுக்கு குறைவான இளம் வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்து, உலகின் தலைசிறந்தஆட்டக்காரர்களாக மாற்றுவேன்.
ஐ.சி.சி. விதிமுறைகளை மீறி, அதிகளவு கையை வளைத்து ஆஸ்திரேலியாவின் மெக்ராத்தும், கில்லெஸ்பியும் பந்து வீசுகிறார்கள்என்ற குற்றச்சாட்டு குறித்து எனக்குத் தெரியாது. இதே போன்ற குற்றச்சாட்டு முன்பு இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மீதுகூறப்பட்டது.
விளம்பரதாரர் ஒப்பந்த விவகாரம் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்மேற்கொள்ளவிருக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் பிரெய்ன் லாரா மற்றும் முன்னணி வீரர்கள் விளையாட மாட்டார்கள்என்று அறிவிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
கிரிக்கெட் பிரியர்கள் லாரா போன்ற அற்புதமான ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பார்க்கவே விரும்புவார்கள். இந்தப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.
போட்டி நடக்கும் நாட்டு வீரர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றியமைப்பது எங்கும் உள்ள வழக்கம்தான்.
அம்பயர்கள் தவறு பண்ணுவது விளையாட்டில் சகஜம்தான். தற்போதுள்ள தொழில் நுட்ப வசதிகள் காரணமாக தவறுகள்தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவும் இங்கிலாந்தும் முயற்சித்தால் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு இணையாக வரமுடியும் என்று கூறினார்.