தாகி கொலை வழக்கு விசாரணைக்கு தடை
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை தொடர்ந்து விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
திமுக கோஷ்டிப் பூசலில் வெட்டிக் கொல்லப்பட்ட தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது. இந் நிலையில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தா.கிருட்டிணன் சகோதரர் ராமையா மதுரை உயர்நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனது சகோதரர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி, எஸ்ஸார் கோபி, மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் அண்ணா நகர் போலீஸார் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தனர்.
மு.க.அழகிரி முன்னாள் முதல்வரின் மகன், திமுகவைச் சேர்ந்தவர். எனது சகோதரரும் திமுக சார்பில் மாநில அமைச்சராகவும், எம்.பியாகவும்இருந்தவர். தற்போது திமுகவைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
வழக்கை விசாரித்து வரும் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஜபருல்லாகானும், திமுகவைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை இணை அமைச்சர்வேங்கடபதியும் வழக்கறிஞர்களாக இருந்தபோதே நெருங்கிய நண்பர்களாவர். இவர்கள் இணைந்து பணியாறியுள்ளனர்.
வேங்கடபதி அமைச்சரானதும் அவரை நீதிபதி ஜபருல்லாகான் சந்தித்தார். அதன் பின்னர் வழக்கின் போக்கே மாறியுள்ளது. எதிர்த்தரப்பினர் விருப்பத்துக்கேற்ப வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை விசாரணையின்போதும் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் 50க்கும் மேற்பட்டோர் கோர்ட்டுக்கு வருகிறார்கள். அவர்களை நீதிபதி கட்டுப்படுத்துவதில்லை.
எனவே நீதிபதி ஜபருல்லா கான் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராமையா.
மனுவை விசாத்த நீதிபதி சிங்காரவேலு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு தள்ளி வைத்தார்.