விவகாரங்களுக்கு காஞ்சி மடம் தந்துள்ள விளக்கம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை, சொத்து, பெண்கள் விவகாரம் ஆகியவை குறித்து சங்கர மடத்தின் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பத்திரிக்கையில் தரப்பட்ட அந்த விளம்பரத்தின் விவரம்:
சொத்து விவரம்:
சங்கர மடத்துக்கு ரூ. 14,000 கோடி, ரூ. 10,000 கோடி, ரூ. 1,000 கோடி சொத்து இருப்பதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. இதெல்லாம்உண்மையாக வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது.
சில அறக்கட்டளைகள் தான் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. பெரும்பாலானவை தனியாக நடத்தப்படுகின்றன. இதில் மடம்தலையிடுவதில்லை. அந்த கணக்கு வழக்குகள் தனி. அவர்களிடம் இருந்து நாங்கள் நிதி பெறுவதில்லை.
பணம், நிலங்கள்:
மடத்துக்குச் சொந்தமான நிலங்கள் எல்லாம் மக்களால் தரப்பட்டவையே. காமகோடி சங்கர மருத்துவமனைக்கு ரூ. 64.98 கோடி கடன்பெறப்பட்டது. இதையும் கணக்கில் வைத்தால், மடத்தில் பண இருப்பும், வங்கியில் பண இருப்பும் மிகவும் சொற்பம் தான்.
பக்தர்களின் நன்கொடையால் தான் மடமே செல்படுகிறது. இந்த கணக்கு வழக்கு வருமான வரித்துறையிடமும், நில, கட்டட விவரங்கள்இந்து அறநிலையத் துறையிடமும் வருடாவருடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை:
அதே போல சங்கராச்சாரியார் போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. அது முழுப் பொய்.(நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்னதைத் தான் பத்திரிக்கைகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது). இதை சங்கராசாரியாரேகூறியிருக்கிறார்.
நான் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை என்று தன்னை சிறையில் சந்தித்த சுஷ்மா சுவராஜிடம் சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார் (ஆனால்,அதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது என்கிறது போலீஸ்).
பல்டி சாட்சி:
இந்த வழக்கில் இரண்டு சாட்சிகள் பல்டி அடித்துவிட்டனர். போலீஸ் சித்திரவதை செய்ததால் அப்படிச் சொன்னதாக நீதிமன்றத்திலேயேகூறியிருக்கிறார்கள்.
செல்போன்:
கொலைக்கு முன்பும் பின்பும் கூலிப் படையிடம் ஜெயேந்திரர் செல்போனில் பேசியதாக போலீசார் கூறுகின்றனர். இந்த செல்போன்மடத்தின் மேலாளருக்கு உரியது என்று கூறியிருக்கிறார்கள். இந்த செல்போன் குறித்து முழு விவரங்களை போலீசார் தர மறுக்கின்றனர்.
வங்கிப் பணம்:
மடத்தின் சார்பில் வங்கிகளில் ஏராளமான பணம் எடுக்கப்பட்டு கூலிப் படைக்கு தந்ததாக சொல்கிறார்கள். இந்தக் கணக்கில் கடந்த ஏப்ரல்முதல் செப்டம்பர் வரை ரூ. 6 லட்சம் எடுக்கப்பட்டு பின்னர் ரூ. 893 டெபாசிட் செய்யப்பட்டது. மற்ற கணக்குகளில் இருந்து எந்தப் பணமும்எடுக்கப்படவில்லை.
தங்கம்:
காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த 65 கிலோ தங்கம் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு தங்க விமானங்கள் அமைக்க மொத்தமே 85.31 கிலோ தங்கம் தான் இறக்குமதிசெய்யப்பட்டது (100 கிலோ அல்ல). 71 கிலோ தங்க பார்கள், 14 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதில்,
ஸ்ரீ ஆதிசங்கரர் விமானம் செய்தது- 21.875 கிலோ
ஸ்ரீ காமாட்சி அம்பாள் விமானம்- 5.999 கிலோ
ஸ்ரீ காமாட்சி அம்பாள் விமான கீழ்பகுதி- 41.411 கிலோ
ஸ்ரீ காமாட்சி அம்பாள் கவசம்- 7.495 கிலோ
ராஜகோபுர கலசம்- 3.932 கிலோ
சிம்மவாகனம்- 4.430 கிலோவில் செய்யப்பட்டது.
ஆக மொத்தம், 85.139 கிலோ தங்கம் செலவிடப்பட்டது. மீதியிருந்த 171 கிராம் தங்கம் முறைப்படி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
நேபாளம் தப்ப முயற்சி:
இதே போல சங்கராச்சாரியார் ஹெலிகாப்டரில் நேபாளத்துக்கு தப்ப முயன்றாக போலீஸ் சொல்கிறது. ஹைதாராபாத்தில் இருந்துநேபாளம் செல்ல 12 மணி நேரம் ஆகும். 5 இடத்தில் இறங்கி எரிபொருள் நிரப்ப வேண்டி வரும். சங்கராச்சாரியாரைச் சுற்றி இசட் பிரிவுபோலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது எப்படி தப்பியோட முடியம்.
அனுராதா ரமணன்:
அனுராதா ரமணன் 12 ஆண்டுகள் ஊமையாக இருந்தது ஏன்?. இப்போது அவர் வாய் திறந்ததன் பின்னணியில் இருப்பது யார்? அவர்சொல்வது உண்மையாக இருந்தால் 2003ம் ஆண்டில் காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை விழாவுக்கு ஏன் தலைமை தாங்கினார்?
ஸ்ரீரங்கம் உஷா:
இதே போல ஸ்ரீரஙகம் உஷாவுக்கும் ஜெயேந்திரருக்கும் தொடர்பிருப்பதாக கதை கட்டினார்கள். உஷாவுக்கு புற்று நோய்க்கு சங்கர மடம்உதவியது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிதியுதவி கோரியுள்ள புற்றுநோயாளிகளுக்கும் மடத்தின்ஸ்ரீமாதா அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்யப்படுகின்றன. (உஷா விஷயத்தில் போலீசார் தங்களது மூக்கில் கரி பூசிக் கொண்டதாகவேஇப்போது வரும் விவரங்கள் தெரிவிக்கின்றன.)
சங்கரராமன்:
இதே போல கொல்லப்பட்ட சங்கரராமன் மடத்தின் ஊழியரே அல்ல. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதை யூகிக்கவேமுடியவில்லை. இதில் மடத்தை தொடர்புபடுத்தியது மிகப் பெரிய தவறு.
ஆடிட்டர்:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மடத்தின் முன்னாள் ஊழியர் தான். ஆனால், மடத்துக்கு எதிராக செயல்பட்டதால் வெளியேற்றப்பட்டார்.இவரை யார் தாக்கினார்கள் என்றும் தெரியாது.