மக்களை திசை திருப்பவே ஜெயேந்திரர் கைது: பண்டாரு
மதுரை
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் திமுக கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்ததால், மக்களை திசைதிருப்பும் விதத்திலேயே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் பண்டாருதத்தாத்ரேயா கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணிக்குசெல்வாக்கு அதிகரித்துள்ளது. அந்தக் கூட்டணியின் செயல்பாடுகளும் மக்களை கவர்ந்துள்ளது.
எனவே மக்களை திசை திருப்பும் விதமாகவே அதிமுக அரசால் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெயேந்திரருக்கும், சங்கரராமன் கொலைக்கும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக முதலில் அரசு கூறியது. ஆனால்இப்போது பழைய வழக்குகளைத் தோண்டியெடுத்து அதை ஜெயேந்திரர் மீது போட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிர்ப்பந்தம் காரணமாகவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க நேர்ந்தது.
வரும் 13ம் தேதி ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரியும், போலி மதச்சார்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப்படும். அன்றைய தினம் பேரணி நடத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு தரப்படும்.
ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அவரை தீபாவளி நாளன்றுகைது செய்ததுதான் தவறு என்கிறோம் என்றார் பண்டாரு தத்தாத்ரேயா.