நடிகர்களுக்கு பாரதிராஜா அட்வைஸ்
ஆரணி:
அரசியல் ஆசை உள்ள நடிகர், நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
ஆரணியில் திருமண விழாவில் பங்கேற்க வந்த இயக்குனர் பாரதிராஜா நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறியதாவது:
திரைப்படத் தொழில் அழியவில்லை, அழியவும் அழியாது. தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள், ஆண்கள்தான்.பெண்கள் டிவியிலேயே படங்களை பார்த்துக் கொள்கின்றனர்.
திருட்டு விசிடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. விரைவில் ஒழித்துக் கட்டி விடுவார்கள்.
இந்தியத் திரையுலகிலேயே சிறந்தது தமிழ் திரைப்பட உலகம்தான். பல மாநில நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்குவந்துதான் புகழ் பெற்றுள்ளனர். தமிழ்ப் படத்தில் நடித்து விட்டால் போதும், பெரும் புகழையும், சாதனையையும் படைத்து விடலாம்.
தமிழக கிராமங்கள் மெல்ல மெல்ல நகரங்களாக மாறி வருகின்றன. முன்பு போலவா கிராமங்கள் இப்போது உள்ளன? வீட்டில் உள்ளபெண்களிடம் பேச வேண்டும் என்றால் கதவுக்குப் பின்னால் இருந்துதான் குரல் கேட்கும். ஆனால் இன்றோ ஆண்களுக்கு நிகராக பெண்கள்வெளியுலகுக்கு வந்து விட்டார்கள்.
பாவாடை, தாவனி மாறிப் போய் சுடிதார், சல்வார் கமிஸ் என்று உடைகளிலும் பெரும் மாற்றம்.
அன்று நான் எடுத்த 16 வயதினிலே படத்தை இப்போது எடுத்தால் மயிலுக்கு சுடிதார்தான் போட வேண்டும். தாவனியுடன் வந்தால்ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இன்று பல சினிமா நடிகர்கள் அரசியல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அரசியலா,சினிமாவா என்பதை அவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சினிமா வேண்டும் என்றால் அரசியலை விட்டு விட வேண்டும்.அரசியல்தான் ஆசை என்றால் சினிமாவை விட்டு வெளியேறி விட வேண்டும்.
சினிமாவுக்குள் இருந்து கொண்டு அவர்கள் அரசியல் கருத்துக்களைக் கூறுவதால் சினிமா தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. அவரைசார்ந்துள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் பாரதிராஜ்