அவதூறு செய்தி: பிரேம்குமார் கடும் எச்சரிக்கை
சென்னை:
என்னைப் பற்றி அவதூறான பொய்ச் செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சங்கராச்சாரியார் வழக்கைவிசாரித்து வரும் எஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை விவரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், இந்தநடவடிக்கைகளை திசை திருப்பும் வகையிலும் என் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் த நியூ இண்டியன் எக்ஸ்பிரசில் எழுத்தாளர்குருமூர்த்தியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலும் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
நான் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியது முதல் இப்போது எஸ்.பியாக பணியாற்றுவது வரை, சட்டத்துக்கு உட்பட்டு, சட்டம்-ஒழுங்கைபராமரிப்பதிலும், எவ்வித பாகுபாடும் இல்லாமல், சாதி, மத வேறுபாடு இல்லாமல் நேர்மையாக பணியாற்றி வருகிறேன்.
எனது 24 வருட போலீஸ் வாழ்க்கையில் நேர்மையான, தொழில்ரீதியிலான, அர்ப்பணிப்புப் பணியால் தான் இன்று எஸ்.பியாகஉயர்ந்துள்ளேன். என்னால் நடவடிக்கை எடுக்கப்பட்ட சமூக விரோதிகளும் சட்டத்தை சீர்குலைப்பவர்களும் தான் எனக்கு எதிராகசெய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
ஒரு வழக்கில் என் மீது ஐகோர்ட் கூறிய கண்டன கருத்துக்களை டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துவிட்டது. இந்த ரத்து உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துவிட்டது.
கன்னியாகுமரி பாதிரியார் ஜான் ஜோசப் கைது என்றாலும் சரி இப்போது சங்கராச்சாரியார் கைது என்றாலும் சரி எனது கடமையையாருக்கும் பயப்படாமல், நேர்மையாக, நெருக்கடிகளுக்கு ஆட்படாமல் தான் செய்துள்ளேன்.
சங்கராச்சாரியார் வழக்கில் அவரது ஜாமீன் மனுவை இரண்டு முறை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவரைக் கைது செய்யபோதுமான ஆதாரம் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதிலிருந்தே நான் நடுநிலையோடும் முறையாகவும்செயல்படுவது உறுதியாகிறது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரம் வந்ததாக நாட்டின் சரித்திரத்தில்இதுவரை இல்லை. சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோது இதுபோன்ற விளம்பரத்தைஜெயேந்திரின் சார்பில் சிலர் கொடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகும்.
என் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை. ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு குருமூர்த்தி போன்றவர்கள் விமர்சனக்கட்டுரை என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
களத்தில் இறங்கிப் பணிபுரிந்து பார்த்தால் தான் அதில் உள்ள சிரமங்கள் புரியும்.
சங்கராச்சாரியார் வழக்கை நான் விசாரிக்க ஆரம்பித்ததில் இருந்தே என் மீது அவதூறுகளைப் பரப்பிவிட்டு வருகிறது ஒரு தரப்பு. இதுபோன்ற செயல்களால் என்னை அடக்கிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், என்னையாராலும் கடமையைச் செய்யவிடாமல் தடுக்க முடியாது.
இனியும் என் மீது இதுபோன்ற அவதூறான செய்திகளை சொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகஇருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்பபைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரேம்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.