மாநாகராட்சி: திமுக கவுன்சிலர்கள் வெளியேற்றம்
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரை குற்றம் சாட்டி சென்னைமாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து குரல் எழுப்பிய திமுக கவுன்சிலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிவெளியேற்றப்பட்டனர்.
சென்னை மாநிகராட்சியின் கூட்டம் இன்று நடந்தது. காலையில் கூட்டம் தொடங்கியதும், அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்வெற்றிவேல் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
அத் தீர்மானத்தில், லாலு பிரசாத் யாதவ் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் என்ற புகார் மீது மத்திய தேர்தல் ஆணையம்விசாரணை நடத்தி லாலு மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.
இதேபோல, 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறனுக்குஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலினும், மாமன்ற உறுப்பினர் சிவாஜியும் பணியாற்றினர். அப்போதுவாக்காளர்களுக்கு உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட எவர்சில்வர் தட்டுக்களை வழங்கியதாக புகார் கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தார் நடத்திய நேரடி விசாரணையில் இந்தப் புகார் நிரூபிக்கப்பட்டது. தட்டுக்களும் பறிமுதல்செய்யப்பட்டன. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தப் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
லாலு பிரசாத் யாதவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை முன்மாதிரியாகக் கொண்டு தயாநிதி மாறன், ஸ்டாலின், சிவாஜிஆகியோர் மீதும் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஜெயித்த தயாநிதிமாறனின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும்,திமுகவின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும், உதயசூரியன் சின்னத்தை முடக்கக் கோரியும், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதிமுகஉறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் அறிவித்தார்.
இதையடுத்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் துணை மேயருக்கு எதிராக கோஷமிட்டனர்.அவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு துணை மேயர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் உள்ளே வந்துதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வந்து வெளியே விட்டனர்.
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட கவுன்சிலர்கள் துணை மேயருக்கு எதிராகவும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும்கோஷமிட்டனர். பின்னர் திமுக கவுன்சிலர் சி.வி.மலையன் கூறுகையில்,
கராத்தே தியாகராஜன் சட்டவிரோதமாக செயல்படுகிறார். சபையில் இல்லாதவர்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்பது மரபு.ஆனால் சபையில் இல்லால திமுக தலைவர்கள் குறித்து அபாண்டமாக புகார் கூறி தீர்மானம் போடுகிறார்கள்.
இந்தப் போக்கைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளைமுடிவடுப்பர் என்றார்.