வேலூரில் உஷாவை தேடும் ஆந்திர போலீஸ்ஸ்
வேலூர்:
ஸ்ரீரங்கம் உஷாவைத் தேடி ஆந்திர மாநிலம் காளகஸ்தி போலீஸார் வேலூர் வந்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் காளகஸ்தியில் உள்ள ஒரு வங்கியில் உஷா, அவரது கணவர் ராமநாரயணன் ஆகியோர் கடந்த 2000ம் ஆண்டு ரூ.30லட்சம் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதனையடுத்து ராமநாராயணன் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளிவந்த அவர் உஷாவுடன் தலைமறைவாகி விட்டார். கடந்த 4ஆண்டுகளாக காளகஸ்தி போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, அவருக்கும் உஷாவுக்கும் தொடர்பிருப்பதாகக்கூறப்பட்டது. அதனையடுத்து உஷா போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காளகஸ்தி போலீஸார் உஷாவைக் கைது செய்ய காஞ்சிபுரம் வந்தனர். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல்உஷா தப்பி விட்டார். இந் நிலையில் உஷா வேலூரில் தங்கியிருப்பதாக ஆந்திர போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து அவர்கள் வேலூரில் முகாமிட்டு உஷாவைத் தேடி வருகின்றனர். இது குறித்து காளகஸ்தி தனிப்படை இன்ஸ்பெக்டர்ரமணப்பா நிருபர்களிடம் கூறியதாவது:
உஷா வேலூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இங்கு வந்து தேடினோம். இதுவரை அவர் கிடைக்கவில்லை. விரைவில் அவரையும்,அவரது கணவர் ராமநாராயணனையும் பிடித்து விடுவோம் என்றார்.
உஷா சென்னையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிலும் இல்லை என்று தெரிகிறது.