1,000 பேர் பலி: மத்திய அரசு
டெல்லி:
நிலநடுக்கம் மற்றும் கடல் நீர் புகுந்ததால் தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகளில் சுமார் 1,000 பேர் பலியாகிவிட்டதாக மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று அவசரகால நிவாரணக் குழுவின் கூட்டத்தைக் கூட்டிய பாட்டீல் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
அடுத்தபடியாக ஆந்திராவில் 200 பேர் பலியாகியுள்ளனர். அந்தமானில் 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வருகிறது. ஆனால்,அந்தமான்-நிகோபார் தீவுகளுடனான தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டுவிட்டதால் முழுமையான விவரம் கிடைக்கவில்லை.
கேரளா மற்றும் மேற்கு வங்கமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தமிழக,ஆந்திர அரசுகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்றார் பாட்டீல்.
உதவ முன் வரும் குஜராத்:
இதற்கிடையே பல முறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் இப்போது நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
தன்னிடம் உள்ள மீட்புக் கருவிகள், நிவாரணப் பொருட்களை இந்த மாநிலங்களுக்கு குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது.