விவேகானந்தர் பாறையில் சிக்கிய 500 பயணிகள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். கடும் கடல் கொந்தளிப்பு காரணமாகஇவர்களை அழைத்து வர படகுகள் செல்லவில்லை.
இந் நிலையில் இவர்களை மீட்க இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன.
விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது. இதைக் காணவும், வழக்கம்போல் தியானமண்டபத்தைக் காணவும் இந்தப் பயணிகள் இன்று காலை படகுகள் மூலம் சென்றனர்.
ஆனால், 8.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் பெரும் அலைகள் எழுந்தன. இதனால் படகு சர்வீஸ் உடனடியாகநிறுத்தப்பட்டது.
இந்த அலைகளால் விவேகானந்தர் பாறை பாதிக்கப்படவில்லை. அலைகள் மிகக் கடுமையாக இருந்தாலும் பாறையில் உள்ளகட்டடங்களில் நீர் புகவில்லை. இதனால் பயணிகள் பாதுகாப்புடன் தான் உள்ளனர்.
இவர்களை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வர இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் கன்னியாகுமரி விரைந்துள்ளன.விமானப் படை வீரர்கள் நிலைமையை ஆராய்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
விவேகானந்தர் பாறையில் சுமார் 500 பேர் இருக்கலாம் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றைய ராட்சச அலைகளுக்கு 10 பேர் பலியாகிவிட்டனர். 100 பேரைக் காணவில்லை. அவர்கள்கதி என்னவென்று தெரியவில்லை.
இம் மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடிசைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்திலும் சேதம்:
இதற்கிடையே கடல் கொந்தளிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல கடலோரப் பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது.
தொண்டி உள்ளிட்ட பல இடங்களில் கடலோரத்தில் இருந்த வீடுகள் அலையால் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
பொங்கிய குளங்கள்:
நிலநடுக்கம் ஏற்பட்டபோது நாகப்பட்டிணம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை,குத்தாலம் ஆகிய பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில குளங்களில் தண்ணீர் கொதித்துள்ளது. கொதித்தவாறே தண்ணீர்பொங்குவதைக் கண்ட அதில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
திருச்செந்தூரில்...
அதே போல திருச்செந்தூர் மீனவர் காலனி, ஜேஜே நகர், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் பயங்கர வேகத்தில் புகுந்தது. தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதிமிக பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மீனவர் குடிசைகள் ஒட்டுமொத்தமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications