நிகோபார் தீவில் 10,000 பேரை காணவில்லை: அந்தமானில் மீண்டும் 3 முறை நில நடுக்கம்
போர்ட்பிளேர்:
அந்தமான் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மாபெரும்பூகம்பத்துக்குப் பின் இதுவரை 55 முறை சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள கார் நிகோபார் தீவில் வசித்த 20,000 மக்களில் 10,000 பேரைக் காணவில்லை என அந்தமான் யூனியன் பிரதேச துணை நிலைஆளுநர் ராம் தபேச கூறியுள்ளார். இவர்கள் பலர் பலியாயிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
சுனாமி அலைகளுக்கு இந்தோனேஷியாவில் 25,000 பேரும், அந்தமான் தீவுகளில் 3,000 பேர் பலியாகிவிட்டனர். மேலும்ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.
இந் நிலையில் அங்கு அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு அந்தமானில் 10.41 மணிக்கு இங்கு நிலநடுக்கம்ஏற்பட்டது. நிகோபார் தீவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 5.1 ரிக்டராக இந்த நில நடுக்கம் பதிவானது.
அதற்கு முன்னதாக இரவு 08.19 மணிக்கு இந்தோனேஷியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்5.3 ஆக இது பதிவானது.
இந் நிலையில் இன்று காலை 7 மணியிலிருந்து 7.10க்குள் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆகவும், 6.1ஆகவும் பதிவானது. முதல் நிலநடுக்கம் லிட்டில் நிக்கோபார் தீவில் கமோத்ரா அருகில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் கார்நிக்கோபார் தீவில் ஏற்பட்டது.
பின்பு 7.44 மணிக்கு அந்தமானின் மேற்கு கரையோரத்தில் நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏதேனும்ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியுடன் அந்தமானைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே அந்தமானுக்கு இந்திய விமானப் படை விமானங்கள் தொடர்ந்து நிவாரணப் பொருட்களையும் குடிநீரையும் மருந்து,உணவுப் பொருட்களையும் ஏற்றிச் சென்றவண்ணம் உள்ளன. வானில் இருந்து இந்தப் பொருட்கள் பல தீவுகளில் வீசப்படுகின்றன.
மேலும் 13 கடற்படைக் கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.