7ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஜெ
சென்னை:
சுனாமி பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், டிசம்பர் 26ம் தேதியன்று தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலைகள் திடீரென மிகச்சீற்றத்துடன் தாக்கியதன் காரணமாக தமிழகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.
தமிழக அரசு விரைந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. பாதிக்கப்பட்டமக்கள் அனைவரும் மறுவாழ்வு பெறும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சுனாமி பேரலைகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டமக்களுக்கான நீண்ட கால மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் கேட்டறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளேன்.
இக் கூட்டம் 7.1.2005, வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வதுதளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
இக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளையும்கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டத்துக்கான அழைப்பு தமிழக அரசின் பொதுத்துறை வாயிலாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.