நாகை பகுதியில் விறுவிறுப்பாண நிவாரணப் பணிகள்
நாகப்பட்டினம்:
தமிழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றபின்பு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 96,000 பேரில் 66,000 பேர் முகாம்களை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பாக தமிழக அரசின் சுனாமி பாதிப்பு நிவாரண ஆணையர் சாந்த ஷீலா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:
சுனாமியால் வீடிழந்தவர்களுக்கு உடனடி உதவியாக ரூ. 2,000 வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அந்தப் பணவினியோகம் நடந்து வருகிறது. மேலும் குடும்ப அட்டைகளைத் தொலைத்தவர்களுக்கு அவற்றை புதிதாக வழங்க 30,000 அட்டைகள்அனுப்பப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளை (செக்) மாற்றுவதற்கு வசதியாகவும், கடல் நீரில் நனைந்த பணத்தை மாற்றஏதுவாகவும் இந்தப் பகுதியில் ரிசர்வ் வங்கி புதிதாக ஒரு அறையைத் திறந்துள்ளது.
இதுவரை 50,000 லிட்டர் பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு ஆவின் கழகம் 31,000 லிட்டர்பாலையும், 3 டன் பால் பவுடரையும் வழங்கியுள்ளது.
66 நிவாரண முகாம்களில் 35ல் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. ஏனைய முகாம்களில் அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சென்னையில் இருந்து சமூக நல அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்.
சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை துறைமுகம் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் துறைமுகம் இயங்கத்தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு சிமென்ட்டும், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சமையல்எண்ணையும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் மீண்டும் நாகை துறைமுகத்திலிருந்து தொடங்கவுள்ளன.
படகுகளின் சேதமதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடல் நீர் உள்ளே புகுந்ததால், ரூ.5.83 கோடி மதிப்பிலான 40,215ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் 8,036 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
10,841 கால்நடைகள் இறந்தன. மேலும்29,678 கால்நடைகள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றன.
இலங்கையில் நான்கு கிராமங்களில் சேதமடைந்த படகு இயந்திரங்களை கிரீவ்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இலவசமாக சரிபார்த்துத்தந்துள்ளது என்று கூறினார்.