பேரழிவு ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி:
சர்வதேச சுனாமி கண்காணிப்பு அமைப்பில் சேர்வது எனவும், தேசிய பேரழிவு ஆணையம் அமைப்பது எனவும் டெல்லியில்இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சுனாமி பேரழிவு குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்நடைபெற்றது. மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்கள்அத்வானி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், சிபிஎம் கட்சித் தலைவர்கள் நிலோட்பால் பாசு, பாசுதேவ் ஆச்சார்யா உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
அனைத்துக் கட்சி கூட்டம் தாமதமாகக் கூட்டப்பட்டதற்கு பாஜக தனது அதிருப்தியைத் தெரிவித்தது. சர்வதேச சுனாமிகண்காணிப்பு அமைப்பில் இந்தியா சேர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல் தேசியபேரழிவு ஆணையம் அமைக்கவும் அரசு ஒத்துக் கொண்டது.
இது தொடர்பாக மத்திய அரசு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமியற்ற இருக்கிறது.
நிவாரணப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக, நேரடியாக தொண்டு நிறுவனங்களுக்கே அவற்றைஅனுப்ப வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஏற்றுக் கொண்டார்.
சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா நிருபர்களிடம் பேசுகையில், டிசம்பர் 26 அழிவை தேசிய பேரழிவாக அறிவிக்கஅனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்தன.
சுனாமி வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் சாதனத்தை அமைப்பது தொடர்பாக விவாதிக்க வருகிற 21ம் தேதி விஞ்ஞானிகளின்கருத்தரங்கை அரசு கூட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து ஆராய, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் இன்னும்ஓரிரு தினங்களில் தமிழகம் செல்கிறார் என்று கூறினார்.