நடிகர் அம்ரீஷ் பூரி மரணம்; மன்மோகன் இரங்கல்
மும்பை:
பிரபல இந்தி வில்லன் நடிகர் அம்ரீஷ் பூரி உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மன்மோகன் சிங்இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூளையில் ரத்தம் உறைந்து, அம்ரீஷ் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கோமாவில் விழுந்தார். மலேரியாநோயும் அவரைப் பாதித்திருந்தது. கடந்த வாரம் இந்துஜா மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 72. அம்ரீசுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரதுஇறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிகிறது.
வில்லனாக தனது நடிப்புலக வாழ்க்கையைத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக இன்றும்நினைவு கூறப்படுபவை.
தமிழில் தளபதி, பாபா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
பிரதமர் இரங்கல்:
அம்ரீஷ் மறைவுக்கு மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்,
அம்ரீஷ் நாடகத்துறையில் தனது முத்திரையைப் பதித்துவிட்டு, இந்தி சினிமாவில் பெரிதும் மதிக்கப்படக்கூடிய நடிகராக உயர்ந்தார். நிஷாந்த் அண்ட் பூமிகா, மிஸ்டர்இந்தியா, சாட்சி 420 ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.
அவரது மறைவு இந்திய சினிமா மற்றும் நாடகத்துறைக்கு பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.