தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக கோரிக்கை
சென்னை:
சட்டத்தின் முன் அனைவரும் சமம் முதல்வர் ஜெயலலிதா கூறுவது உண்மை என்றால் பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது சட்டம் பாயாதது ஏன் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஜெயேந்திரர் சிறையில் உள்ள நிலையில் விஜயேந்திரரைக் கைது செய்ததால் 2,500 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் சந்திரமெளலீஸ்வரர் பூஜை தடைபட்டு விடும் என பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்.
அதற்கு பதில் எழுதிய ஜெயலலிதா முற்றிலும் பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய ஜெயலலிதா பிரதமரிடமும் பொய்யான தகவல்களை அளித்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய சட்ட பிரச்சனைகளுக்குப் பின்னரும் விஜயேந்திரர் சட்டப்படிதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினால் அதை சிறுபிள்ளை கூட நம்பாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தமிழக அரசின் நிலையை மக்கள் பாராட்டுவதாக ஜெயலலிதா கூறியிருப்பது கொடூரமான நகைச்சுவையாகும். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கோமதி, தளவாய் சுந்தரத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தளவாய்சுந்தரம் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காத நிலையில் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்று கூறுவது நகைப்பிற்குரியதாகும். இந் நிலையில் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என பாஜக கருதுகிறது என்று கூறியுள்ளார்.