சுனாமி: துக்கம் அனுசரித்த தமிழகம்
சென்னை:
சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசுஅலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, 12ம் தேதியன்று (இன்று) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இரண்டு நிமிட மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் சுனாமி பேரழிவுப் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அரைக் கம்பத்தில்தேசியக் கொடி பறக்க விடப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை கூடி மெளன அஞ்சலி செலுத்தியது. பின்னர் இரங்கல் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ராணுவத் திடலில் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக ஊழியர்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல தலைமைச் செயலக ஊழியர்கள், சென்னையில் உள்ள பிற அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சென்னை,மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் தனியார் நிறுவனங்களிலும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.