சங்கரராமன்: அப்புவையும் அப்ரூவராக்க முயற்சி?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ரவி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து கூலிப் படைத் தலைவன் அப்புவையும் அப்ரூவர் ஆக்க காஞ்சிபுரம்போலீஸார் முயன்று வருவதாகத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகியுள்ளார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர்அப்ரூவர் ஆகவுள்ளார். இதன் மூலம் வழக்குகளிலிருந்து அவர் விடுபட்டு, போலீஸ் தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். அவருக்கு மிக மிககுறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந் நிலையில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான அப்புவையும் அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்பு முயலுகிறது. அப்புவுடன் சேர்த்துக்கைது செய்யப்பட்ட கூலிப் படையைச் சேர்ந்த 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அத்தோடு சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆனால் அப்பு மீது மட்டும் இன்னும் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்கவில்லை. அவரை அப்ரூவராகுமாறு போலீஸ் தரப்பு கேட்டுவருவதாகவும், ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் குண்டர் சட்டத்தைப் பிரயோகிக்க மாட்டார்கள் என்றும், ஆனால் அப்ரூவர் ஆக மறுத்தால்குண்டர் சட்டத்தின் கீழ் அவரையும் கைது செய்ய போலீஸ் தரப்பு ரெடியாக உள்ளதாகவும் தெரிகிறது.
அப்புவும் அப்ரூவரானால் சங்கராச்சாரியார்கள் மீதான போலீஸ் பிடி இறுகும் என்று தெரிகிறது. மேலும் அவர்கள் தண்டனையிலிருந்துதப்புவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அப்பு அப்ரூவர் ஆனார்அல்லது குண்டர் சட்டத்தில் கைது என்ற செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.