குற்றப்பத்திரிக்கை நகல் எடுக்கும் பணி தீவிரம்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்குவதற்காக,குற்றப்பத்திரிக்கையை பிரதி எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் 21ம் தேதிதாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை நீதிபதி உத்தமராஜ் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கொடுப்பதற்காக நகல் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குற்றப்பத்திரிக்கை நகல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக இரவு, பகலாக காஞ்சிபுரம் காட்டுப்பங்களாவில் அதி நவீன ஜெராக்ஸ் இயந்திரத்தில் குற்றப்பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது.
ரூ. 20 லட்சம் செலவில் இந்த ஜெராக்ஸ் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு தரப்படும் நகல்கள் தவிர,சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான மனுக்கள் விசாரணையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கும்குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்படும்.
குற்றப்பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணியில் கூடுதல் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.