ஜெயலலிதாவின் பையனூர் பங்களாவில் திருட்டு!
மகாபலிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூர் கிராமத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொள்ளை நடந்துள்ளது.
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பையனூர் கிராமத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்குச்சொந்தமான பங்களா உள்ளது.
முன்பு இந்த பங்களா இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமானதாக இருந்தது. கடந்த ஆட்சியின்போது இந்த பங்களாவைமுதல்வர் ஜெயலலிதா வாங்கினார். (மிரட்டி, உருட்டி வாங்கியதாக புகாரும் கூறப்பட்டது).
ஜெயலலிதா எப்போதாவது இந்த பங்களாவுக்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது இந்த பங்களாவுக்கு ஜெயலலிதா அதிகம்வருவதில்லை. ஆனாலும் பங்களா புதுப்பொலிவுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சில காவலாளிகள் பாதுகாப்புக்காக உள்ளனர். இவர்கள் தூங்கி வழிந்த நேரத்தில் இந்த பங்களாவில் கொள்ளை நடந்துள்ளது. ஏ.சி.மெஷின், டிவி, சிடி பிளேயர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையர்கள் லவட்டிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மகாபலிபுரம் போலீஸார் சுனாமியை விட அதிகமான வேகத்தில் நடவடிக்கையில்இறங்கியுள்ளனர்.
பையனூரில் உள்ள காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் 19 பேரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். இதற்குபையனூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்பாவிகளைப் பிடித்துச் சென்று போலீசார் விசாரிப்பதாகக் கூறி பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
பொதுமக்களின் கோபத்தைப் பார்த்த போலீஸார் 12 பேரை விடுவித்துவிட்டனர். ஆனால், மேலும் 7 பேரை கைது செய்துள்ளனர்.