ஜெ. தானம்: வருமான வரித்துறை கோரிக்கை- கேரளம் நிராகரிப்பு
திருவனந்தபுரம்:
முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்த தங்கக் கிரீடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றுகேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா தங்கக் கிரீடம், யானை உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினார். இவற்றைசோதனையிட்டு ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை வருமான வரித்துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
கோவில் நிர்வாகம் முதலில் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குருவாயூர் கோவிலுக்குத்தரப்பட்ட காணிக்கையை யாரும் சோதனையிட அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கிரீடத்தை ஆய்வு செய்ய கொடுத்த அனுமதியை ரத்து செய்யுமாறு கோவில் நிர்வாக அதிகாரிக்கு மாநில அரசு நெருக்குதல்தந்தது.
அனுமதி தந்த அதிகாரியை அழைத்து தண்டித்தது.
இந் நிலையில் இன்று காலை கேரள அமைச்சரவை முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் கூடி இப் பிரச்சினை தொடர்பாக விவாதித்தது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சாண்டி பேசுகையில்,
வருமான வரித்துறையின் கோரிக்கை முறையற்றது, இதை ஏற்க முடியாது. கோவிலுக்குத் தானமாக கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்வதுஎன்பது கோவிலின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் விதமாக அமையும் என்றார்.
உம்மன் சாண்டி கிருஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வந்த கிரீடத்தை சோதனையிடஅனுமதித்தால் அவருக்கு அரசியல் சிக்கல் எழும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல முதல்வர் ஜெயலலிதா வழங்கிய இந்த கிரீடத்தை சோதனையிடுவதில் அதிக அக்கறை காட்டும் வருமான வரித்துறையைகட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் என்பதும் நினைவுகூறத்தக்கது.