பெண்கள் மட்டும் இழுக்கும் முருகன் கோவில் தேர்!
தருமபுரி:
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை மகளிர்மட்டுமே இழுத்து வந்தனர்.
சமூகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நெடுங்காலமாக இக் கோயிலில் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது தமிழகத்தில் வேறெந்த கோயிலும் மகளிருக்கு இந்த சிறப்பு இல்லை.
இந்த ஆண்டு தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புற்று மண் எடுத்து முளையிடுதல் தொடங்கிகொடியேற்றம், ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி வீதிஉலா, புலி வாகன உற்சவம், பூத வாகன உற்சவம், நாக வாகன உற்சவம்,திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த சில தினங்களாக நடந்தன.
விழாவின் சிறப்பம்சமான மகளிர் தேர் இழுத்தல் நடந்தது. தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.1,000க்கும் அதிகமான பெண்கள் பக்தியுடன் தேரை நிலையில் இருந்து இழுத்து வந்தனர்.
ஏராளமான பெண்கள் உப்பு, சர்க்கரை கலவையை சுவாமி மீது தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நிலையில் இருந்து 200 அடி தூரம்வரை மகளிர் தேரை இழுத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குமாரசாமிப்பேட்டை முக்கிய வீதி வழியாக தேரை இழுத்தனர்.
இன்று குதிரை வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவமும், நாளை பூப்பல்லக்கு உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், நாளை மறுநாள் சயனஉற்சவமும் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications