புதிய வீராணம்: மக்கள் எதிர்ப்பை சமாளிக்க ஜெ. புது வியூகம்!
சென்னை:
புதிய வீராணம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் ரூ.75 கோடிசெலவில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2001ம் ஆண்டில் தமிழக முதல்வராக மீண்டும் நான் பதவியேற்றபோது, சென்னையில் தண்ணீர் பிரச்சினை பெரிய அளவில்இருந்தது. இதனைத் தீர்க்க புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டேன்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் பண்ருட்டி நிலத்தடி நீர்ப்படுகையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, தினமும் 90 மில்லியன் லிட்டர் வரைநீர் எடுத்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் சென்னையின் குடிநீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.
பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரி நிரம்பியதால் அக்டோபர் மாதம் முதல் புதிய வீராணம் திட்டம் முழு அளவில்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பண்ருட்டி பகுதியில் கடந்த மே முதல் அக்டோபர் வரை நீர் எடுக்கப்பட்டிருப்பினும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையவோ, நீரின்தன்மை மாறவோ இல்லை.
இதனையடுத்து விவசாயிகளுக்கோ, நிலங்களுக்கோ எவ்வித பாதிப்பும் வருங்காலத்தில் இருக்காது என்பதை உறுதி செய்தபிறகு கடந்தமாதம் பெரம்பலூரில் வீராணம் விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
வீராணம் ஏரியில் நீர் இல்லாத காலங்களில் மட்டுமே வீராணம் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள ஆழ்துளைக் கிணறுகள்மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்படும். இதை அந்த விழாவில் நான் தெளிவாகக் கூறினேன்.
ஆனால் சிலரது தூண்டுதலின்பேரில் தவறான பிரசாரங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டதால், இந்தப் பகுதி விவசாயிகளில் ஒருபிரிவினருக்கு இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் வீராணம் விரிவாக்கத் திட்டம குறித்துபொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் விளக்குவதற்காக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்தேன்.
அப்போது விவசாயிகள் சிலர் தங்களது கோரிக்கைகளை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அவற்றை ஆய்வு செய்த நான்,அதனடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அவை வருமாறு:
கல்லணைக்குக் கீழே 60வது மைல்(வாழக்குறிச்சி), 54/4வது மைல்(அறங்கோட்டை) மற்றும் 42வது மைல்(ஏலக்குறிச்சி) ஆகியஇடங்களில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தலா ரூ.25 கோடி ரூபாய் செலவில் 3 தடுப்பணைகள் கட்டப்படும். இவற்றில் தேக்கப்படும்மழைநீரின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படும். அதோடு நிலத்தடி நீர் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.
காவிரி டெல்டா பகுதிகளான திருவையாறு மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் இப்போது முன்னுரிமை அடிப்படையில் மின்இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதைப் பின்பற்றி பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா நீர்ப்பாசனம் பெறும் டி.பழுர்,திருமானூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகளை வழங்கஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம் கடந்த மாதம் 31ம் தேதி வரை மின் இணைப்பு கோரி பதிவு செய்த 4,986 விண்ணப்பங்களுக்கும் உடனடியாக மின்இணைப்புகள் வழங்கப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கப்படுவதால், அந்த ஆற்றுப்படுகையில் தேங்கக்கூடிய நீரின் அளவு குறைந்து விடும் என்றவிவசாயிகளின் அச்சப்படுகின்றனர். இதைப் போக்கும் வகையில் கல்லணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட ஆற்றுப் பகுதியில் மணல்எடுக்கத் தடை விதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே, இந்தப் பகுதி விவசாயிகள் சிலரின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகிவிடாமல் புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்த முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.