வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி துவக்கம்
சென்னை:
தமிழகத்தில் 6 மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள 38 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி தொடங்கியது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 38 சட்டமன்றத் தொகுதிகளில்வாக்காளர் பட்டியலைத் திருத்தி அமைக்கும் பணி தொடங்கியது.
வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவங்கும். திருத்தி அமைக்கப்பட்டவரைவு வாக்காளர் பட்டியல் வரும் ஜூன் 16ம் தேதி வெளியிடப்படும்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள், தபால் நிலையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதன்பின்பு விடுபட்டவாக்காளர்களின் பெயர்களைச் சேர்த்தல், ஆட்சேபணைகள் ஆகிய விண்ணப்பங்கள் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக அவசர ஆலோசனை:
இதற்கிடையே சட்டசபைத் தொகுதி வரையறை தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப சட்டசபைத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சென்னைக்குக் கூடுதலாக 2தொகுதிகள் கிடைக்கவுள்ளன. தென் மாவட்டங்களில் சில சட்டசபைத் தொகுதிகள் குறையவுள்ளன.
தொகுதிகளை வரையறை செய்வதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ஆளுங்கட்சிக்கு சாதகமான வகையில்தொகுதிகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந் நிலையில் இப்பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி அண்ணாஅறிவாலயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.