கணக்கு விவகாரம்: ஜெயேந்திரர் மீது தனி வழக்கு போட முடியாது- நீதிபதி கண்டனம்
சென்னை:
சங்கர மட கணக்குகளை திருத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனு மீது வரும் 4ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்குகளில் ஜெயேந்திரர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இரு வழக்குகளிலும் அவர் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இந் நிலையில் திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் சங்கர மட கணக்குகளை திருத்திய வழக்கிலும் ஜெயேந்திரரை தற்போது காஞ்சி தனிப்படை சேர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து ஜெயேந்திரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக துரைசாமி ஆஜராக உள்ளார். எனவே வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி இடைமறித்து, இது என்ன வழக்கு? இதில் ஏன் ஜெயேந்திரரை சேர்த்திருக்கிறார்கள். அதுவும் மடத்தின் கணக்குகளை திருத்தியதாகவும் மோசடி செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறீர்கள். இதை எப்படி குறிப்பிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தனி வழக்காக பதிவு செய்ய முடியும்? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், இது குறித்து எனக்கு எந்த விவரமும் தெரியாது. நாளை அரசு வழக்கறிஞர் துரைசாமி வந்து பதில் சொல்வார் என்றார்.
அப்போது ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகரன் இடைமறித்து, எப்ஐஆரில் ஜெயேந்திரர் பெயரே இல்லை. இருந்தாலும் இந்த வழக்கிலும் ஜெயேந்திரரை கைது செய்வார்கள் என்று அச்சமாக உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி தணிகாச்சலம் பேசுகையில், இந்த வழக்கின் அடிப்படையிலேயே எனக்கு சந்தேகம் உள்ளது. மடத்தின் கணக்குகளைத் திருத்திக் கொள்ள ஜெயேந்திரருக்கு அதிகாரம் உண்டு.
இந்த வழக்கைப் பதிவு செய்வதாக இருந்தால் ஜெயேந்திரர் மீதான மற்ற வழக்குகளுடன் சேர்த்துத் தானே பதிவு செய்ய வேண்டும். எதற்காக இந்த தனி வழக்கு? நீங்களாக எப்படி பொய்க் கணக்கு என்று சொல்கிறீர்கள்? இது அவர்கள் கணக்கு, அதைத் திருத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அது தவறு என்று கருதினால் சங்கரராமன் கொலை வழக்கோடு இதையும் சேர்த்திருக்கலாம். தனி வழக்காக ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.