234லிலும் தனித்து போட்டி: பாஜகவின் தைரியம்!
ஓசூர்:
சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசைக் கண்டித்து ஓசூரில் பாஜகவினர் பாதயாத்திரைப் போராட்டம் நடத்தினர். பாதயாத்திரையைத் ராஜா தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு கவலை கொள்ளாமல், தேவையில்லாத விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசோ, சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்குவதை விட்டு விட்டு, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டுள்ளது.
இது நிரந்தரத் தீர்வு கிடையாது. நாளைக்கு வீராணம் பகுதியில் நிச்சயம் தண்ணீர்ப் பிரச்சினை உருவாகும்.
ஓசூர் நகரம், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பெங்களூரை ஒத்து விளங்குகிறது. எனவே இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், கால் சென்டர்கள் அமைக்க அரசு முன் வர வேண்டும்.
இதன் மூலம் ஓசூர் நகரம் முன்னேறிய நகரமாக உருவாகும். சென்னையில் மட்டுமே சாப்ட்வேர் நிறுவனங்களை தொடங்கக் கூடாது. தமிழகம் முழுவதும் விரிவாக்க வேண்டும்.
கெலவரப்பள்ளியில் அணை கட்டி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் விவசாயத்துக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதேபோல, ஓசூரிலிருந்து சென்னைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ஓசூருக்கும், பெங்களூருக்கும் இடையே மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications