வீரப்பன் பிரேத பரிசோதனை: டாக்டர்களிடம் விசாரணை
தர்மபுரி:
வீரப்பனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினரிடம் வரும் 11ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தர்மபுரி மாவட்ட உதவி கலெக்டர் பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமார், டிஎஸ்பி செந்தாமரைக் கண்ணன், இன்ஸ்பெக்டர் வெள்ளைதுரை, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இவர் விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணை இழுத்துக் கொண்டே போய்க் கொண்டுள்ளது. இந் நிலையில் வீரப்பன் மரணத்தில் மர்மங்கள் உள்ளதாகவும், உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரதேப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி முத்துலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து ஆர்டிஓ (உதவி கலெக்டர்) விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறும், அதன் பின்னர் முத்துலட்சுமி சொல்லும் புகாரை தர்மபுரி போலீசார் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஆர்டிஓ தனது இறுதிக் கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமை தொடங்குகிறார். அன்றைய தினம் வீரப்பன் மற்றும் 3 பேரின் உடல்களை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர் பேராசிரியர் வள்ளிநாயகம் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
பின்னர் வீரப்பன் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாகரன், சுப்பிரமணியன் ஆகியோரிடமும் விசாரணை நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications